கோலாலம்பூர், பிப்ரவரி.19-
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் வேளையில், இன்று கோலாலம்பூர் தலைநகரின் பல இடங்கள் 'ஒரே நிசப்தமாக' இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்கள் மற்றும் ஆய்வுகளின்படி, வழக்கமாக மக்கள் கூட்டத்தால் நெரிசலாகக் காணப்படும் பகுதிகள் இன்று காலை ஆள்அரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. குறிப்பாக, எப்போதும் மக்கள் கடலெனக் காட்சியளிக்கும் கோலாலம்பூரின் 'கோல்டன் டிரையாங்கிள்' (Golden Triangle) என்று அழைக்கப்படும் புக்கிட் பிந்தாங் பகுதியும் இதில் அடங்கும்.
Threads தளத்தில் பகிரப்பட்ட தகவல்களின்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 பரவலின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையான பிகேபி காலத்தைப் போல இப்பகுதி நிசப்தமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
"நிஜமாகவே இன்று காலை கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ரமலான் மாதத்தின் இந்த சிறிய நிம்மதி பெரிய அர்த்தத்தைக் கொடுக்கிறது," என்று ஒரு பயனர் Threads-ஸில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், 'Jalannow' இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இன்று வேலை நாளாக இருந்த போதிலும், சுங்கை பீசி டோல் சாவடியிலிருந்து தலைநகரை நோக்கி வரும் போக்குவரத்து சீராகவும், நெரிசலின்றியும் காணப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.








