கோலாலம்பூர், ஜனவரி.17-
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள சாரா உதவி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் அனைத்தும், பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு முழுமையான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டவை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மக்கள் தற்போது எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுகளின் சுமைகளைக் குறைப்பதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, இந்தத் திட்டமானது மேம்படுத்தப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், மொத்தம் 3.1 மில்லியன் தனிநபர்கள், தங்கள் மைகாட் வழியாக வரவு வைக்கப்பட்ட சாரா உதவியைப் பெற்றுள்ளதாக அன்வார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்திட்டமானது வெறும் பண உதவிக்கானது மட்டும் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அன்வார், சிறு வணிகர்கள் சாராவில் இணைவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்த சாரா வலையமைப்பில் சிறு வணிகர்களின் பங்கேற்பானது நாடு தழுவிய நிலையில், 10 ஆயிரம் இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் நிதியானது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே மையப்படுத்தப்படாமல், நகரங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு வணிகர்களுக்கும் சென்றடைந்துள்ளதை அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் மலேசியர்கள் யாரும் ஓரங்கட்டப்படவோ அல்லது பின்தள்ளப்படவோ மாட்டார்கள் என்பதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதிச் செய்யும் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.








