புச்சோங், தேசா தஞ்சோங் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின், படிக்கட்டுப் பகுதியில் சிலை வைத்து ஆலயம் போன்ற சன்னதி அமைத்த குடியிருப்பாளர், அதனை அகற்றியுள்ளார்.
பூச்சோங் நகராட்சி மன்றமும், கின்ராரா நகராட்சி மன்றமும் இணைந்து நடத்திய ஆய்வுக்குப் பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த தெய்வ சிலை அகற்றப்பட்டு தற்காலிகமாக கீழ்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அச்சிலையை முறையாக ஒரு நிரந்தர இடத்திற்கு மாற்ற அக்குடியிருப்பாளர் உறுதியளித்துள்ளதாகவும் மாமன்றம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில், சுமூகமான தீர்வு கிடைக்க அக்குடியிருப்பாளரும், அவரது குடும்பத்தாரும் அளித்த ஒத்துழைப்பிற்கு மாமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் இதுபோன்ற சிலைகள் அல்லது சன்னதிகளை வைத்துள்ள குடும்பங்கள், அவற்றை விரைவில் உகந்த இடங்களுக்கு மாற்றுமாறும் மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது சமூக ஒற்றுமையை பேணவும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் நேற்று வைரலாகப் பரவியதையடுத்து, மலேசிய இந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஆர்.எஸ். மோகன் அச்சிலையை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட இந்து அமைப்புகள், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் உடனடித் தீர்வு கண்டுள்ளனர்.









