பினாங்கில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை, ஆசிரியர் பிரம்பால் அடித்ததில், அம்மாணவரின் விரல்களில் காயமும் வீக்கமும் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான தகவல் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், செபராங் பிறை உத்தாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
இது குறித்து செபராங் பிறை உத்தாரா மாவட்ட கல்வித்துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மாநில கல்வித்துறை இயக்குநர் முகமது ஜியாவுதீன் மாட் சாட் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவரின் உறவினர்களுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சந்திப்பில் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதோடு, பள்ளி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








