காப்பார் பகுதியில் இம்மாதம் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, வர்த்தகர் ஒருவர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி அ. கார்த்தியாயினி முன்பு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 49 வயதான ஆர். கணேசலிங்கம், அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப் பரப்பில் வருவதால், அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
குற்றப்பத்திரிக்கையின் படி, கடந்த் மார்ச் 5-ஆம் தேதி, காலை 9.46 மணி முதல் 9.47 மணி வரை, ஜலான் காப்பார் அருகிலுள்ள பத்து 12, தாமன் ஸ்ரீ காப்பார் சந்திப்பில், 33 வயதான கே. தினேஷ் குமார் என்பவரை கணேசலிங்கம் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையோ அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மரண தண்டனை விதிக்கப்படாதபட்சத்தில், குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படலாம்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை குறித்து வரும் ஏப்ரல் 22 -ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி, காப்பார் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிளை வாகனம் ஒன்று மோதியது.
அதில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் உயிரிழந்ததும், மற்றொருவர் காயமடைந்தததாக சிலாங்கூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.








