அலோர் காஜா, அக்டோபர்.19-
மலாக்கா மாநிலம், இனி கல்லறைகள் நிர்வாகத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி, "டிஜிட்டல் கல்லறை" எனும் அதிநவீனத் திட்டத்தை செயல்படுத்தும் முன்னோடி மாநிலமாக மாறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்லறையும் டிஜிட்டல் முறையில் எண் குறியீடு இடப்பட்டு, பாரம்பரிய கல்லறைகளின் நிர்வாகச் சவால்களைச் சமாளிப்பதன் மூலம் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை எளிதில் கண்டறிய முடியும்.
மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக, காலப் போக்கில் கல்லறைகளின் அடையாளக் குறிகள் மறைந்து போகும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினர் கூட எந்தச் சிரமமுமின்றித் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் பராமரிக்கவும் இந்த டிஜிட்டல் முறை உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மஸ்ஜிட் தானாவில் உள்ள கம்போங் பூலாவ் எனும் பகுதி இத்திட்டத்தின் முதல் களமாகச் செயல்படும் என்றும், அதன் வெற்றியின் அடிப்படையில் இது மலாக்கா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அப்துல் யாவுஃப் யுசோ தெரிவித்தார். இந்தக் கனவுத் திட்டம், மலாக்காவின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, மனிதர்களின் இறுதி ஓய்விட நிர்வாகத்தில் ஒரு புதிய மைல் கல்லைப் பதிக்கிறது.