சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு சர்வதேசக் குழுவில், மலேசியப் பொதுச் சுகாதார நிபுணரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான டத்தோ டாக்டர் அதீபா கமருல்ஜமான் இடம்பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்-ஆல், டாக்டர் அதீபா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மலேசிய எய்ட்ஸ் அறக்கட்டளையான MAF தலைவராகப் பொறுப்பு வகிக்கும், டாக்டர் அதீபா, சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்திறனை மதிப்பிட உருவாக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழுவில் இணைகிறார்.
அக்குழுவானது, 2029-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச போதைப்பொருள் கொள்கை மறுஆய்விற்கான முக்கிய பரிந்துரைகளை வழங்க உள்ளது.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் அதீபா, இது “வாழ்வில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கொள்கைகள், உண்மையில் பொது சுகாதாரத்தையும், மனித நலனையும் பாதுகாக்கிறதா? என்பதை மதிப்பிடுவது மிகவும் முக்கியமான பணியாகும் என்றும் டாக்டர் அதீபா தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கொள்கையானது, பொது சுகாதார முன்னுரிமைகள், மனித உரிமைக் கருத்தாய்வுகள் மற்றும் அறிவியல் சான்றுகளை எவ்வாறு சிறப்பாகப் பிரதிபலிக்க முடியும் என்பதை ஆராய்வதற்காக, இந்தப் குழு பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
போதைப்பொருள் கொள்கை சீர்திருத்தத்தில் மலேசியா எடுத்துள்ள சமீபத்திய முற்போக்கான நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக டாக்டர் அதீபா -வின் நியமனம் பாராட்டப்படுகின்றது.
குறிப்பாக, கட்டாய மரண தண்டனையை நீக்குதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரை குற்றவாளிகளாக அல்லாமல் சுகாதார நோக்கில் அணுகும் நடவடிக்கைகள் போன்ற முக்கிய மாற்றங்கள் இதன் ஒரு பகுதியாகும்.








