புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று, நான்கு மாத ஆண் குழந்தையை கொலை செய்ததாக, 22 வயதான குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் நூர் ஃபர்ஹானா ஃபஸ்மார் அப்துல்லா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
மெஜிஸ்திரேட் நூருல் ரஷீதா முகமது அக்கிட் முன்னிலையில் குற்றச்சாட்டானது வாசிக்கப்பட்டபோது, அதனை நூர் ஃபர்ஹானா புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.
என்றாலும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, கடந்த மார்ச் 9-ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை, செபராங் ஜெயா மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், 29 வயதான உம்மு ஹபீபா வஹாப் என்பவரின் நான்கு மாத குழந்தையை அவர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.








