மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்- மும், தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ்ஸும் மாமன்னரின் நேரடி பார்வையில் கொண்டு வரப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் முன்வைத்துள்ள பரிந்துரையை விவாதிக்க தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற விவகாரங்களை இணக்கமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிஆரெம்மும், பெட்ரோனாஸ்ஸும் மாமன்னரின் நேரடி பார்வையில் இருப்பதுடன் அவை மாமன்னரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாட்டின் 17 ஆவது மாமன்னராக பதவியேற்கவிருக்கும் ஜோகூர் சுல்தான், முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து விவாதிப்பதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
நாட்டின் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்கும் ஆணையமும், நிதி வளத்தை பெறுக்கக்கூடிய தேசிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமும் மாமன்னரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
இது போன்ற பரிந்துரையை முன்மொழிவதற்கும், கருத்து கூறுவதற்கும் ஒரு மாநில ஆட்சியாளர் என்ற முறையில் ஜோகூர் சுல்தானுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று அன்வார் குறிப்பட்டார்.








