கோலாலம்பூர், ஜூன்.01-
பூடி95 எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஒதுக்கீடானது 200 லிட்டராகவே தொடர்கிறது என்றும், அது 150 லிட்டராகக் குறைக்கப்படவில்லை என்றும் நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் பூடி95 அமைப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, சில பயனாளர்களுக்கு மாதாந்திர ஒதுக்கீடு 150 லிட்டர் எனக் காட்டப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட காட்சிப் பிழை மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, அப்பிரச்சினை தற்போது கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியுடைய பயனாளர்களுக்கான பூடி95 திட்டத்தின் மாதாந்திர ஒதுக்கீடு ஜூன் மாதத்தையும் சேர்த்து 200 லிட்டராகவே நீடிக்கிறது என்பதை நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், பூடி95 திட்டம் சீராகவும், வெளிப்படையாகவும், ஒழுங்குமுறையுடனும் செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்ய அமைச்சு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








