கோலாலம்பூர், பிப்ரவரி.04-
நாட்டில் பொது இடங்களில் குப்பை வீசி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி ஒரே நேரத்தில் தங்களது சமூக சேவைத் தண்டனையை மேற்கொள்ள வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவாளிகள் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், சாலைகளைக் கூட்டுதல் மற்றும் சாக்கடைகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
2007-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மைச் சட்டத்தின் 672 ஆவது விதியில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, இதுவரை 600 குற்றப் பத்திரிகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 462 உள்ளூர்வாசிகளும் 138 வெளிநாட்டினரும் அடங்குவர் என்று ங்கா கோர் மிங் விளக்கினார்.
இத்தகைய வழக்குகளில் 46 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளன. அதில் மூன்று வழக்குகளில் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரிங்கிட் வரை அதிகபட்ச அபராதம் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கை வெறும் தண்டனைக்காக மட்டுமல்லாமல், தூய்மையைப் பேணுவது குறித்து மலேசியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என ங்கா கோர் மிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.








