பினாங்கு, ஜன. 18-
அண்மையில் கத்தாரில் நடைபெற்ற ஆசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று, மலேசியாவிற்கும், பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்ந்த பினாங்கைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆறு பேரின் மகத்தான சாதனையை போற்றும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பாராட்டு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
உலக அரங்கில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பத்தை பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், அக்கலையில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு, தங்களின் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, சிலம்ப விளையாட்டிற்கு பெருமை சேர்த்த அந்த ஆறு வீர்களின் கடும் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் மற்றும் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்த பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டது.
சிலம்பப்போட்டியில் 12 தங்கங்ளை குவித்த பிரகாஷ், சஷ்டிவீனா, லீனாஸ்ரீ, கவித்திரா, டர்னிஷா மற்றும் ராணிஷா ஆகிய ஆறு வீரர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் ரொக்கத்தொகையும், நற்சான்றிதழையும் வழங்கி ராயரும், லிங்கேஸ்வரனும், அறங்காவலர் டத்தோ ஜே. தினகரனும் சிறப்பு செய்தனர்.
ஆறு வீரர்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களின் மகத்தான் வெற்றிக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக ராயரும், டாக்டர் லிங்கேஸ்வரனும் குறிப்பிட்டனர்
கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் திறமையாளர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உரிய அங்கீகரத்தையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வரும் என்பதற்கு இந்த பாராட்டு விழா ஒரு சான்றாகும் என்று ராயரும், டாக்டர் லிங்கேஸ்வரனும் தங்கள் உரையில் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அறு வீர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு தங்களுக்கான வெகுமதியையும் நற்சான்றிழையும் பெற்றுக்கொண்டனர்







