மலேசிய அரசியல் வரலாற்றில் மாபெரும் பூகம்பமாக, டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், டான் ஸ்ரீ முகைதீன் யாசினைத் தொடர்ந்து நாட்டின் மூன்றாவது முன்னாள் பிரதமரான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது ஊழல் குற்றவியல் வழக்கு பாய்ந்துள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சொத்து விபரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இஸ்மாயில் சப்ரிஇன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருந்தார்.
எனினும், திடீர் இதயக் கோளாறு மற்றும் இதயத் துடிப்பு முடுக்கக் கருவி அறுவை சிகிச்சைக்காக அவர் தேசிய இதயக் கழகமான ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, இந்த அதிரடி வழக்கு விசாரணை, வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு அதிரடியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2022 ஆம் ஆண்டு நவம்பர் வரை வெறும் 15 மாதங்கள் பிரதமராகப் பணியாற்றிய இஸ்மாயில் சப்ரி , பெரிய அளவிலான சொத்து விபரங்களை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இஸ்மாயில் சப்ரியின் முக்கிய அதிகாரியின் வீட்டில் எஸ்பிஆர்எம் நடத்திய சோதனையில், அவருக்குச் சொந்தமானவை என்று சந்தேகிக்கப்படும் பல நாட்டு நாணயங்கள் அடங்கிய 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் மற்றும் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோ தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவிருக்கிறது.
ஏற்கனவே இஸ்மாயில் சப்ரியை எஸ்பிஆர்எம் விசாரணை செய்த போது, அவர் நெஞ்சு வலியினால் அவதிப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்குமூலப் பதிவு பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர்களான டத்தோ ஸ்ரீ நஜீப், 1MDB மற்றும் எஸ்சிஆர் (SRC) ஊழல் வழக்குகளில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில், டான் ஸ்ரீ முகைதீன் யாசின் 'ஜனா விபாவா' (Jana Wibawa) ஊழல் வழக்கில் நீதிமன்றப் படிகளையேறிப் போராடி வரும் சூழலிலும், 15 மாதங்கள் மட்டுமே நாட்டின் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரியும் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பது மலேசிய அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.








