சபா, கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தின் 3-ஆவது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதி நுழைவாயிலில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையிலும், பயணிகள் நடமாட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சருமான டத்தோ சான், கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு வந்தடைந்ததும் இச்சம்பவம் குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். விபத்து நடந்த பகுதியை உடனடியாகச் சுத்தம் செய்து, பயணிகள் தடையின்றிச் செல்வதை விமான நிலைய நிர்வாகம் மிக விரைவாக உறுதி செய்தது.
இவ்விபத்தில் ஒரே ஒரு தானியங்கி கண்ணாடி கதவு மட்டுமே சேதமடைந்துள்ளது என்றும், மற்ற அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளும் முழுமையாகச் செயல்படுவதால் பயணிகள் வழக்கம் போல் தங்களது பயணத்தைத் தொடரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான சூழலில் உடனடியாகச் செயலாற்றிய விமான நிலைய ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.








