ரவாங்கில் உள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்தை இடித்துத் தள்ளும் நடவடிக்கைக்கு எதிராக நில உரிமையாளரான 'யாயாசான் குப்ரா' (Yayasan Kubra) அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மீண்டும் அமல்படுத்துவதற்கான மேல்முறையீட்டு மனுவை ஆலய நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நூரின் படாருடின் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, யாயாசான் குப்ரா அமைப்புக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையாக வழங்குமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 1995 முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலய நில விவகாரத்தில் சர்ச்சை நிலவுவதால் இடித்துத் தள்ளும் வேலைகளுக்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது. எனினும், மார்ச் 31 அன்று உயர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது. இதனை எதிர்த்து ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழக்கறிஞர் அமாண்டா சோனியா மாத்யூ தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு அனுமதி மனுவே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நில உரிமையாளருடன் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த பிப்ரவரியில் உரிய அனுமதியின்றி ஆலயத்தின் ஒரு பகுதியை இடிக்க முயன்ற நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








