நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரும், மந்திரி பெசாருக்குச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி மக்கள் நலப் பணிகளைத் திறம்பட முன்னெடுப்பார்கள் என்று பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான முகமட் ஹசான், செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும் என்றார். அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களுக்குத் தெளிவாக விளக்குவதோடு, மக்களின் பிரச்சனைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைச் சேகரித்து மாநில நிர்வாகத்தை மேம்படுத்த அவர்கள் உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புகளை முழுமையாக உணர்ந்து செயல்பட, தங்களது இலாகாக்களின் கீழ் உள்ள அரசுத் துறைகளிடமிருந்து முறையான விளக்கக் குறிப்புகளைப் பெற்று நிர்வாக விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








