சபாவின் செம்பூர்ணா (Semporna) பகுதியில் சமூக சுற்றுலா அனுமதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர்வாசிகளுடன் கூட்டுச் சேர்ந்து தங்கும் விடுதிகள் உட்படப் பல்வேறு வணிகங்களை வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நடத்தி வருவதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மலேசியாவிற்குள் சுற்றுலாப் பயணிகளாக நுழைந்து விட்டு வணிகத்தில் ஈடுபடுவது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று எச்சரித்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின், குற்றவாளிகளுக்கு எதிராகக் கூட்டு அமலாக்க நடவடிக்கைகள், அபராதங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதே வேளையில், கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தின் பாதுகாப்பு நிலைத்தன்மை மீதான அனைத்துலக நம்பிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஜூன் மாதம் வரை இப்பகுதிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








