கோம்பாக், ஏப்ரல்.19-
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியையும் எரிபொருள் செலவினங்களையும் கருத்தில் கொண்டு, ஊடகவியலாளர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தகவல் தொடர்பு அமைச்சின் வாராந்திரச் செய்தியாளர் சந்திப்புகள் இனி நேரடியாகவும் இணைய வழியிலும் கலப்பு முறையில் நடத்தப்படும் என அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார். இதன் மூலம் கோலாலம்பூரில் உள்ள செய்தியாளர்கள் ஒவ்வொரு முறையும் புத்ராஜெயாவிற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மாதத்திற்கு 300 லிட்டர் பூடி95 பெட்ரோல் சலுகையைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான பரிந்துரை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார். நீண்ட தூரம் பயணம் செய்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் சிரமங்களை அரசு உணர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.








