நவ. 24-
சமூக ஊடகங்களில் அதிகப்படியான தகவல்களைப் பகிர்வதால் அடையாள திருட்டு, இணைய வழி துன்புறுத்தல், சொத்து திருட்டு போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் சமூக ஊடக உள்ளடக்கப் பாதுகாப்பு, மேலாண்மைப் பிரிவின் இயக்குநர் Nur Amanina Che Azemi தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் தனிப்பட்டத் தகவல்களைப் பகிரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, வீட்டு முகவரி, அடையாள அட்டை எண், தொலைபேசி எண், இருப்பிடம், குழந்தைகளின் புகைப்படங்கள் போன்ற தகவல்களை பகிரக்கூடாது என Nur Amanina அறிவுறுத்தினார்.
பயனர்கள், தங்களின் சமூக ஊடகக் கணக்கில் தனியுரிமை அமைப்புகளை செயல்படுத்தி, தனிப்பட்டத் தகவல்களை நீக்கி, அந்நியர்களை தொடர்புகளிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மன உளைச்சலில் இருக்கும் போது அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் போது, மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது,
இணைய வழி துன்புறுத்தலுக்கு ஆளானால், காவல் துறை அல்லது இணையப் பாதுகாப்பு மையம் போன்ற பொருத்தமான அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மேலும், மனநல ஆலோசனை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் Nur Amanina குறிப்பிட்டார்.








