புக்கிட் சாங்காட் ஆசா பகுதியில் மலையேற்றத்தின் போது மாயமான நூர் இசாதி ஹுமைரா அஜிசுல் என்ற 19 வயது இளம்பெண், கடந்த நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் பலராலும் பகிரப்பட்டு, அவர் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவரது இறப்புச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்று காலை 11.59 மணியளவில், புக்கிட் சாங்காட் ஆசா மலைப்பாதையில், மீட்புக் குழுவினர் அப்பெண்ணின் உடலை கண்டறிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
அப்பெண் கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் அவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 10.50 மணியளவில், குடும்பத்தினருடன் புக்கிட் சாங்காட் ஆசா மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நூர் இசாதி ஹுமைரா அஜிசுல் , வெப்பமும் சோர்வும் காரணமாக குடும்பத்தினரை விட்டு சற்று தூரம் முன்னதாக நடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் அவர் மாயமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட அவரது சடலமானது சவப்பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








