தஞ்சோங் மாலிம், உப்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு முதல் கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
இது பேரா மாநில அரசாங்க நிதியாக இருந்த போதிலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பேரா மாநிலம் மட்டுமின்றி இதர மாநிலங்களை சேர்ந்த இந்திய மாணவர்களும் பயில்வதால் அனைவரும் பயன்பெறும் வகையில் அந்த 25 ஆயிரம் ரிங்கிட் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பு, அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் காத்திகேசனிடம் ஒப்படைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈப்போ, கல்லுமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தான மண்டபத்தில் பேரா மாநில இந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவநேசன் இதனை தெரிவித்தார்,
இந்திய மாணவர்களுக்கான நீண்ட கால அடிப்படையிலான நிதி உதவிக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு நிதியை ஒதுக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.









