மலேசியா - இந்தியா இடையிலான இருதரப்பு நட்புறவும் பொருளாதாரக் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகத் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் மேதகு பி.என். ரெட்டி, விரைவில் தனது தூதரகப் பணியை நிறைவு செய்யவிருப்பதையொட்டி, அமைச்சர் ரமணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து விடைபெற்றார்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், இரு நாடுகளும் மிக நெருங்கிய பங்காளிகளாக இருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு வளர்ந்து வரும் எதிர்கால பரஸ்பர உறவு குறித்து பல நல்ல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வழிவகுத்தது என்றார்.
மலேசியாவில் பணியாற்றிய காலத்தில் இருநாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பி.என். ரெட்டி ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்கும், காட்டிய அர்ப்பணிப்பிற்கும் அமைச்சர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்திய தூதர் வெறும் அலுவல் ரீதியான உறவை மட்டும் பேணாமல், இரு நாடுகளுக்கும் இடையே ஆழ்ந்த மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்ட ஒரு நல்ல நட்புப் பாலத்தை உருவாக்கியுள்ளார் என்றும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மக்களுக்கு ஒரு சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த பலமான நட்புறவை மலேசியா தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.










