கோலா திராங்கானு, செப்பாட் மிதவைச் சேமிப்பு மற்றும் சுமையிறக்கும் பகுதியில் பெட்ரோனாஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்த சம்பவத்தில், கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் இறந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அம்மூவரில், 38 வயதான நிக் ஹஃபிஃபி அஸ்ரி அப் மஜித், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், 28 வயதான ஃபைசுவான் ஹக்கிம் புஸ்தமாம் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களாலும், 38 வயதானஅகமட் ஃபிக்ரி ஜகாரியா நீரில் மூழ்கி இறந்ததும் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கோலா திராங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மற்றொரு தொழிலாளியான 37 வயதான தவ்பிக் ருஸ்லான், கோல திரங்காணு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








