கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும்விடுதியில், நேற்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், போதைப்பொருட்களுடன் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக நம்பப்படும் 51 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.35 முதல் 5 மணி வரையில் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 21 முதல் 52 வயது மதிக்கத்தக்க 23 உள்ளூர் ஆடவர்கள் மற்றும் 28 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்ததாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவ இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சுமார் 1 லட்சத்து 3 ஆயிரத்து 70 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 1.15 கிலோ கிராம் திரவ வடிவ எம்டிஎம்ஏ, 284 கிராம் எம்டிஎம்ஏ தூள், 8.56 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 8.7 கிராம் எக்ஸ்டசி தூள் மற்றும் 11.61 கிராம் கெட்டமின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று முதல் ஆறு நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952, பிரிவு 39B, பிரிவு 39A(1), பிரிவு 12(2) மற்றும் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








