தீவிரவாதப் போக்கு மற்றும் இன, மத ரீதியிலான தூண்டுதல்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வெறுப்புணர்வுக்கு எதிரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறைகூவல் வீணாகிவிடும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, தீவிரவாதக் குரல்கள் ஓங்கி ஒலிக்க வழிவகுப்பதாகக் குறிப்பிட்ட கணபதிராவ், , கடந்த காலங்களில் இந்திய சமூகத்தைப் பாதித்த சர்ச்சைகளின் போது மலேசிய அரசாங்கம் காட்டிய பலவீனமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
இனம், மத வேறுபாடின்றி நாட்டின் அமைதியைக் குலைப்பவர்கள் மீது சட்டம் பாய வேண்டும். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அரசாங்கம், அரசியல் சுயலாபங்களுக்காகச் செயல்படக் கூடாது. வெறும் வெற்று முழக்கங்கள் இன்றி, நாட்டின் ஒற்றுமையையும் நீதியையும் உறுதிப்படுத்தும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளையே மலேசியர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கணபதிராவ் கூறினார்.








