கோலாலம்பூர் - சிரம்பான் நெடுஞ்சாலையில் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விளம்பரப் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.
நெகிரி செம்பிலானில் இருந்து கிளந்தான் நோக்கி 5 மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்த லாரி, கோலாலம்பூர் - சிரம்பான் நெடுஞ்சாலையின் 297.2 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில் இந்த விபத்தில் லாரியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர் என்றார். இருவருக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.








