கோலாலம்பூரில் இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழை மற்றும் சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துப் பாதிப்பும், வாகனச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
பிற்பகல் 2.50 மணி அளவில் அவசர அழைப்புகள் வந்ததை அடுத்து, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உடனடியாக மூன்று இடங்களுக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேக்ஸ் நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீ மலேசியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் பெர்சோனா கார் மீது மரம் விழுந்தது.
சுங்கை பீசியில் உள்ள மலேசிய சமூகவியல் கட்டட வளாகத்தில் வாகன நிறுத்தக் கூரையின் மேல் பெரிய மரம் விழுந்ததில் அங்கிருந்த 4 கார்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்துச் சாலைகளும் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டன.








