ஜோகூர் மாநிலம், பெக்கான் நானாஸ் பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே, கடந்த மே 21-ஆம் தேதி, அதிகாலை 3.53 மணியளவில், உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட 22 வயதான ஆர். அருண் குமாரின் குடும்பத்தினர், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் படி போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் உறவினரான 21 வயதான ஜே. ராஜேஸ்வரி இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், 51 வயதான அருண்குமாரின் தந்தை தமது மகனின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் அருண்குமாரின் நண்பர்கள் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அருண்குமார் நல்ல மனம் படைத்தவர் என்றும், பாரம்பரிய இசைக்கருவியான ‘உருமி’ வாசிப்பதில் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர் என்றும் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக 18 முதல் 22 வயதுடைய 6 பேரை, போலீசார் கைது செய்துள்ளதாக, Pontian மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரத் ஹுசைன் மியான் ஹுசைன் தெரிவித்துள்ளார்.








