மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழானது வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவிருந்த நிலையில், அத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத்துறை இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
புதிய கடப்பிதழ் அறிமுகத்திற்கான புதிய தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
கடப்பிதழ் விநியோக சேவைகளானது சீராக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், பொதுமக்கள் அந்த செயல்பாடுகளில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், பொதுமக்கள் தற்போதைய கடப்பிதழ்களை வழக்கம்போல் புதுப்பித்து கொள்ளலாம் என்றும், செல்லுபடியாகும் கடப்பிதழ்களை அதன் காலாவதி தேதி வரை பயன்படுத்தலாம் என்றும் ஜகாரியா ஷாபான் அறிவித்துள்ளார்.
மேலும், புதிய கடப்பிதழ் தொடர்பான தகவல்கள் குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வத் தளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நாட்டின் பயண ஆவணங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் குடிநுழைவுத் துறை தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்றும் ஜகாரியா ஷாபான் உறுதியளித்துள்ளார்.








