அலோர் ஸ்டாரில் தனித்து வாழும் தாய் ஒருவரைக் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இல்ஹாம்னி பாதருதீன் என்ற 32 வயதான நிலமுகவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி என். பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அந்நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 307(1)-ன் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், அந்நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இதனிடையே, அவரது வழக்கறிஞரான ஹக்கீம் ஹம்ரான் முன்வைத்த மனுவை ஏற்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவரை மனநல மதிப்பீட்டிற்காக பேராக் மாநிலம் தஞ்சுங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் மனநல பரிசோதனைக்கு அனுப்ப அனுமதி வழங்கினார்.
கடந்த மே 17 -ஆம் தேதி, இரவு 9.19 மணியளவில், அலோர் ஸ்டார் தித்தி காஜா பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில், இல்ஹாம்னி பாதருதீன் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








