கோலாலம்பூர், பிப்ரவரி.18-
மலேசியாவில் பதிவாகியுள்ள காச நோய்த் தொற்றுகளில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
15 விழுக்காட்டினர் மட்டுமே வெளிநாட்டினர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வெளிநாட்டினரால் தான் நாட்டில் காச நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களாக, பொதுமக்களிடையே நிலவி வரும் கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, இத்தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூர்வாசிகளிடையே அதிகமாகப் பரவி வரும் காச நோய்த் தொற்றுகளை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஸுல்கிஃப்லி எச்சரித்துள்ளார்.
மேலும், நெரிசலான வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமூக-பொருளாதார காரணிகளுடன் நெருங்கிய தொடர்புடைய காச நோயை, வறுமை நோய் என்றும் அவர் விவரித்துள்ளார்.
எனவே, காச நோயின் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸுல்கிஃப்லி வலியுறுத்தியுள்ளார்.








