புத்ராஜெயா, ஜூலை.11-
மலேசியாவின் மக்கள் தொகை வரும் 2059 ஆம் ஆண்டில் 4 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2060ஆம் ஆண்டு 4 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்து பின்னர் 2065 இல் 4 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரமாகவும் 2070 இல் 4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரமாகவும் வீழ்ச்சி காணும் என்று மலேசிய புள்ளி விவரத்துறை தெரிவித்தது.
கடந்த 2020 முதல் 2059 வரை மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 2020 இல் 1.7 சதவீதத்திலிருந்து 2060 இல் 0.1 சதவீதமாகக் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புள்ளி விவர தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் கூறினார்.
2060 வரையிலான 40 ஆண்டு காலக் கட்டத்தில் கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு மற்றும் புத்ராஜெயாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2060 ஆம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் தொகையுடன் சிலாங்கூர் அதிக மக்கள் வசிக்கும் மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








