செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரைக் கடிதங்கள் மற்றும் உறவுமுறைகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் வழக்கத்தை பூமிபுத்ரா ஏஜென்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இத்தகைய தோழமைவாத முறைகேடுகளாலும், கடனைத் திருப்பிச் செலுத்தாததாலும் பல பூமிபுத்ரா ஏஜென்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார். வணிகத் தொடக்க நிதியைப் பெறும் சிலர், அதனைத் தொழிலில் முதலீடு செய்யாமல் ஆடம்பரக் கார்கள் மற்றும் அலுவலகங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
அரசாங்கம் புதிய பூமிபுத்ரா ஏஜென்சிகளை உருவாக்காது என்றும், மாறாக மாரா, தேக்குன் நேஷனல், எஸ்எம்இ கார்ப்பரேஷன் போன்ற தற்போதைய ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.








