மலேசிய வானொலியில் பல ஆண்டு காலமாக தமிழ் ரசிர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வந்த கலப்பட நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்குமானால் , அந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு விரிவுப்படுத்தப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் தியோ நி சிங் உறுதி அளித்தார்.
இன்று ஜோகூர் கூலாய், தி கம்யூன் லைஃப்ஸ்டைல் மால் மண்டபத்தில் நடைபெற்ற மின்னல் எஃப்எம்-மின் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை மற்றும் கலாச்சார நிகழ்வான ரோட்ஷோ நிகழ்விற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ தெரிவித்தார்.
70 ஆம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தினரிடையே மிகவும் புகழ்பெற்ற இந்த தமிழ் வானொலியின் கலப்படம் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற உள்ளூர் கலைஞர்களின் கோரிக்கைக்கு இணங்க, இவ்வாண்டு 3 முன்னோடித் திட்டங்களாக இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
அதன் முதல் அங்கமாக கூலாய் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அமைச்சர், இன்றைய மேடையில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஜோகூரைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்கள் என்பது பெருமிதத்திற்குரியது என்றார். கூலாயைத் தொடர்ந்து மேலும் இரண்டு இடங்களில் இந்த ரோட்ஷோ நடத்தப்பட்டு மக்களின் ஆதரவு சோதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரங்கம் நிரம்பி காணப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பிரமுகர்களாக தொடர்புத்துறை அமைச்சின் பு உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பிரிவின் துணை தலைமைச் செயலாளர் மனோ வீரபுத்திரன், மின்னல் எஃப்எம்- மின் தலைவர் குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








