போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக கார் ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான முறையில் எதிர்த்திசையில் காரைச் செலுத்தி, இரு வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நெகிரி செம்பிலான், ரெம்பாவ் அருகே நடந்துள்ளது.
சாலை வரி மற்றும் காப்புறுதி முடிவடைந்த காரை நிறுத்துமாறு போலீசார் கூறியபோது, 30 வயது ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்று புரோட்டான் சாகா மற்றும் டொயோட்டா யாரில் ஆகிய இரு கார்கள் மீது மோதியுள்ளார்.
பின்னர் காரை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள செம்பனைத் தோட்டத்திற்குள் தப்பியோடியுள்ளார். காரில் இருந்த பணப்பை மூலம் அவர் சிலாங்கூரைச் சேர்ந்தவர் என்பதும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர் மற்றும் பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








