இனவாத அரசியல் மூலம் மக்களைப் பிரிக்க நினைப்பவர்களை வாக்காளர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் பிரதமர் ஒருவர் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு விடுத்திருக்கும் கோரிக்கை, நாட்டின் எதிர்காலத்திற்கு எதிரானது என கார்த்தியாயினி கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல்வாதிகள் தங்களின் திட்டங்களும், தீர்வுகளும் தீர்ந்து போகும் போதே இத்தகைய இனவாத அட்டையைத் கையில் எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியிருந்தால், நாட்டின் எதிர்காலம் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். தலைவர்களை அவர்களின் நேர்மை, தகுதி மற்றும் சேவை மனப்பான்மையைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டுமே தவிர, இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல என்று கார்த்தியாயினி குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவினக் குறைப்பு, சிறந்த கல்வி, தரமான வேலைவாய்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை குறித்தே நமது தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும். இனவாத அரசியலை முழுமையாக நிராகரித்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கார்த்தியாயின் வலியுறுத்தினார்.








