கோலாலம்பூர், பிப்ரவரி.03-
கோலாலம்பூர், கூச்சாய் லாமா பகுதியில் நேற்று, கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு மலேசியரும், வெளிநாட்டவர்வரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, "Sojul Gang" என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் கும்பல் ஒன்றை குடிநுழைவுத் துறை முடக்கியுள்ளது.
அண்மையில், கிளந்தான் எல்லை வழியாகக் கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 20 சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
முதல் சோதனையானது ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.
அங்கு குடிநுழைவு அதிகாரிகள் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும், விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்றையும் வழிமறித்து, 8 வெளிநாட்டுப் பிரஜைகளைக் கைது செய்தனர்.
அதே வேளையில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து 12 வங்கதேச ஆடவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கடத்தல் கும்பலானது ஒவ்வொரு புலம்பெயர்ந்தவருக்கும் தலா 12 ஆயிரம் ரிங்கிட் விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1.2 மில்லியன் ரிங்கிட் பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.








