கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கீ எனப்படும் நீர் சறுக்கு ஊர்தியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் ஒருவர், கடலில் மூழ்கியதாக அஞ்சப்படுகின்றது.
நேற்று மாலை நடந்த இச்சம்பவம் தொடர்பாக, தங்களுக்கு இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 22 நிமிடங்களில் பெர்சியாரான் புத்ரா நிலையத்திலிருந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 4-வது மண்டலத் தலைவர் ஜம்ரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
வலுவான அலைகளின் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கீ-ஐ மீட்க, அராஷ் நஷ்ரான் அப்துல் மாசெர் என்ற அந்த இளைஞர், பாதுகாப்பு அங்கி இன்றி கடலுக்குள் இறங்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது அவரைத் தேடும் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.








