பேராக் மாநிலத்தில் பள்ளி ஆசிரியராக நடித்து, போலி கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி பெற்றோரிடமிருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத மர்ம நபர் குறித்து போலீசாருக்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளன.
முதற்கட்ட தகவலின் படி, அந்த நபர் தன்னை ஆசிரியர் என அறிமுகப்படுத்தி, பள்ளி கல்வி நிகழ்ச்சிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களிடம் கூறியதுடன், அதற்காக போலியான கியூ.ஆர் குறியீட்டையும் வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி கட்டணங்களைச் செலுத்தும் முன் கியூ.ஆர் குறியீட்டின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பயன்படுத்திய மோசடி முறை குறித்து மஞ்சுங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று புகார்கள் கிடைத்ததாகவும், அந்நபரை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மஞ்சுங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.








