சிறார்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறார்கள் சட்டம் 2001, பள்ளி பகடிவதைத் தடுப்புச் சட்டம் 2026, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 தொடர்பான விழிப்புணர்வு ஆதரவு நிகழ்ச்சிகள், கல்வித் துறை முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் சார்பில், சிறார்களுக்கான ஆணையர் டாக்டர் ஃபரா நினி துசுகி மற்றும் டாக்டர் முகமது அல் அதிப் சாமுரி தலைமையிலான பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் இந்தத் திட்டம் குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பேச்சுவார்த்தையில், இணையத்தில் நடக்கும் அச்சுறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாகவும் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர்வு திட்டங்கள் மூலம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்து தெளிவான புரிதலைப் பெற்று, பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








