கோலாலம்பூர், மே 11-
கடந்த வியாழக்கிழமை பின்னிரவு கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் யாப் குவான் செங் பகுதியில் வீற்றிருக்கும் கேளிக்கை மையம் ஒன்றில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
25 வயது மதிக்கத்தக்க அந்த இரு ஆடவர்களும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பத்தகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தி நாசவேலையில் ஈடுபட்டது மற்றும் அச்சுறுத்தியது முதலிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ் அந்த இருவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
இதுவரையில் அந்த கேளிக்கை மையத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகி ஆகிய இருவரிடம் போலீசார், வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்கள், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கதலில் சம்பந்துப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.








