ஜோகூர் பாரு, ஜூலை.28-
ஜோகூர் மாநிலம் இஸ்கண்டார் புத்ரி அருகே உள்ள Forest City மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் போலீசார் நடத்திய மிகப் பெரிய அளவிலான சோதனையில், சட்டவிரோத கால் சென்டர்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 330-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சீனா, இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை காதல், நாணய முதலீடு மற்றும் கிரிப்டோகரன்சி மோசடிகள் மூலம் அக்கும்பல் ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சோதனையின் போது சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்தே இந்த மோசடி கும்பல்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், இந்த மோசடி வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களையும் தேடி வருகின்றனர்.








