கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
கோலாலம்பூர் பிரதான வர்த்தகப் பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதை குழியில் விழுந்து காணாமல் போன இந்திய மாதுவின் தேடும் நடவடிக்கை முழு வீச்சில் முடக்கி விடப்பட்ட நிலையில் பரபரப்பு நிறைந்த அந்த வர்த்தகப்பகுதி இன்று சனிக்கிழமை சற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மஸ்ஜிட் இந்தியாவின் நடைபாதைகளில் காத்திருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மஸ்ஜிட் இந்தியாவையொட்டி துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையில் செயல்படும் இரவு சந்தை, மீட்புப்பணிக்கு வழிவிடும் வகையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடைப்பாதையில் ஏற்பட்ட இந்த பேரிடர் சம்பவத்தினால் மஸ்ஜிட் இந்தியாவில் வர்த்தகம் கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.








