பெர்லிஸ் மாநிலம் கங்கார்-இல் இந்து ஆலயம் ஒன்று அண்மையில் இடிக்கப்பட்டது தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணியை தாம் ஏற்பாடு செய்யவோ அல்லது விளம்பரப்படுத்தவோ இல்லை என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரான ராயர், சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தளங்களில் பரவி வரும் அப்பேரணி குறித்த சுவரொட்டியில் தனது பெயர், புகைப்படம் மற்றும் பதவியானது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தச் சுவரொட்டியில் “பெர்ஹிம்புனான் மேரா மகா காளி” என்ற பெயரில் பேரணி நடைபெறவுள்ளதாகவும், கோயில் பாதுகாப்புச் செயற்குழு மற்றும் மலேசிய இந்து ஆகமம் அணி ஆகியவை ஏற்பாட்டாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம் உட்பட அருண் துரைசாமி மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் சித்தி காசிம் ஆகியோர் அதில் பேச்சாளர்களாக இடம்பெற்றுள்ளதாகவும் ராயர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியவர்கள் அந்த விளம்பரங்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, அதன் பரவலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பெர்லிஸ், புக்கிட் லாகியில் உள்ள வீரமாகாளியம்மன் ஆலயமானது அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








