சபா மாநிலம் சண்டாக்கான் பகுதியில், 62 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தானா மேரா, ஜாலான் லெய்லா பகுதியில் உள்ள இரட்டை மாடி மர வீட்டில், தனியாக வசித்து வந்த அந்தப் பெண்ணின் சடலமானது, கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையில் துணி போர்த்தப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அடங்குவர் என சண்டாக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜார்ஜ் அப்துல் ரக்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், 10 முதல் 39 வயதுடைய இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஏழு பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றது.








