பிகேஆர் கட்சியின் மூத்த தலைவர் தியான் சுவா,மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளதுடன், பத்து தொகுதியில் போட்டியிடவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
பத்து மக்களுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருப்பதால், மீண்டும் அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது பிகேஆர் தலைமைத்துவத்தின் தேர்தல் வியூகத்தைப் பொறுத்தது என்றும் தியான் சுவா தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்தை விட, பிகேஆர் கட்சியானது நீண்டகாலம் நிலைத்திருக்கும் வலுவான அரசியல் அமைப்பாக உருவெடுத்து, எதிர்கால தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்பதே தனது முக்கிய இலக்கு என்றும் அவர் விவரித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இரண்டு தவணைகள் பத்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த தியான் சுவா, வழக்கு ஒன்றில் தமக்கு விதிக்கப்பட்ட 2,000 ரிங்கிட் நீதிமன்ற அபராதம் காரணமாக, 2018 பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.
அவரது வேட்புமனுவானது தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாமல் போனது.
இந்நிலையில், தமக்குப் பதிலாக அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியபிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து பத்து தொகுதியில் வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








