பகாங் மாநிலம் தெமர்லோவில் நடந்த விஷப்பாம்புகளை கையாள்வது தொடர்பான பயிற்சியின் போது, ராஜ நாகம் ஒன்று கடித்ததில் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படையான எ.பி.எம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
பயிற்சியின் போது வலது கை விரலில் ராஜ நாகம் கடித்ததைத் தொடர்ந்து, 39 வயதான சார்ஜென்ட் முகமது முவாசம் ஷா கமார்டின் உடனடியாக சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
என்றாலும், சிகிச்சை பலனின்றி, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள், அபாய மேலாண்மை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை அவ்வப்போது மீளாய்வு செய்து மேம்படுத்த தயாராக இருப்பதாக எ.பி.எம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010 முதல் எ.பி.எம்-ல் பணியாற்றி வந்த அந்த அதிகாரி, விஷ உயிரினங்களைக் கையாள்வதில் பயிற்சியும் நீண்ட அனுபவமும் பெற்றவர் என்றும் எ.பி.எம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதையும் எ.பி.எம் உறுதிப்படுத்தியுள்ளது.








