கோலாலம்பூர் புடு சென்ட்ரல் குடிநுழைவு அலுவலகத்தில் விண்ணப்பதாரர் ஒருவர் அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலான பதிவைத் தொடர்ந்து, குடிநுழைவுத் துறை போலீசில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், கணினி பதிவுகள் மற்றும் அன்றைய பணியில் இருந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வைரல் பதிவில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகளானது, சி.சி.டி.வி காட்சிகள், தொடர்புடைய பதிவுகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுடன் ஒத்துப்போகவில்லை என்றும் ஜகாரியா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான சம்பவ சூழ்நிலையை உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெளிவுபடுத்துவதற்காக இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைக்காக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு குடிநுழைவுத் துறை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் விவரித்துள்ளார்.








