சுபாங் ஜெயாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பூங்கா நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டுமென அம்மாவட்ட அம்னோ மற்றும் பாரிசான் கோரிக்கை விடுத்துள்ளது.
சுபாங் மாவட்ட அம்னோ மற்றும் பாரிசான் நேஷ்னல் தலைவர் ஆர்மாண் அஷா அபூ ஹனீபா, இச்சம்பவமானது எப்படி நடந்தது?, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து நிர்வாகம் முறையாக விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ரோலர் கோஸ்டரில் பயணித்த 10 பேர் காயமடைந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 11 முதல் 44 வயதிற்குட்பட்ட மலேசியர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








