குவாந்தானில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 வயது ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படி தண்டனையை, அம்மாநில உயர்நீதிமன்றம் ஓராண்டு சிறை மற்றும் 2 பிரம்படியாக குறைத்துள்ளது.
இந்த வழக்கில், குற்றம் நடந்த போது அந்த நபருக்கு 19 வயது என்றும், கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்டோபர் 8 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இச்சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அம்மாநில செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகள் என, தண்டனைகளை தொடர்ச்சியாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதித்துறை ஆணையர் சம்ரி மஸ்ரி, குற்றம் செய்தபோது அவருக்கு இளம் வயது என்பதாலும், இது அவரது முதல் குற்றம் என்பதாலும் அவரது தண்டனையை குறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சிறுமியின் வயது காரணமாக அவரது சம்மதம் சட்டரீதியாக பொருந்தாது என்றும், குற்றவாளியின் தண்டனை தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு திட்டமிட்ட பாலியல் வேட்டையாடல், கட்டாயப்படுத்தல் அல்லது சுரண்டல் போன்ற தன்மை கொண்ட வழக்குகளிலிருந்து வேறுபட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.








